Tuesday 8 August 2017

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு பள்ளி ஆசிரியர்!

எடப்பாடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரை பெற்றோர்கள் சரமாரியாக தாக்கி, பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் அர்த்தநாரி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், அப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்வதாக, அங்கு பயிலும் மாணவிகள் பெற்றோர்களிடம் கடந்த ஒரு மாதமாக புகார் கூறி வந்துள்ளனர். 

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் தலைமையாசிரியர் சுந்தரவடிவேலுவிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் நடவடிக்கை எடுப்பதாக கூறிய தலைமை ஆசிரியர், அந்த ஆசிரியரைக் கண்டித்த பின்னர், மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனாலும், ஆசிரியர் அர்த்தநாரி, தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வருவதாக, மாணவிகள் மீண்டும் பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அப்பள்ளியை முற்றுக்கையிட்டு, அங்கிருந்த ஆசிரியர் அர்த்தநாரியை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், கச்சுப்பள்ளி சாலையில் அவர்கள்  சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையறிந்த மகுடஞ்சாவடி போலீசார் மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களை சமாதானம் செய்து மறியலை கைவிடச் செய்தனர். 

இதனிடையே, மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் அர்த்தநாரியை பணிநீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment