Friday 1 November 2013

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.

குறள் 27: 

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

சாலமன் பாப்பையா உரை:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

பரிமேலழகர் உரை:

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.).

Thursday 31 October 2013

ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது....!

ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு நடத்தி வருகிறது.

இந்த தகுதி தேர்வு, இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நடத்தப்படுகிறது. ஆனால் ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

எனவே தமிழகத்திலும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், ‘தகுதியான, திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்பதற்காக தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது’ என்று கூறியிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பழனிமுத்து ஆஜராகி, ‘கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணி முடிந்துவிட்டது. தேர்வின் முடிவினை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதம் செய்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 18–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதேநேரம், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள், அதைத்தொடர்ந்து நடைபெறும் பணி நியமனம் ஆகியவை இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று உத்தரவிட்டனர்.

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.

குறள் 26: 

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

பரிமேலழகர் உரை:

செயற்கு அரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, 'நாலிரு வழக்கின் தாபதபக்கம்'(புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.).

Wednesday 30 October 2013

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.


குறள் 25: 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

சாலமன் பாப்பையா உரை:

அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

பரிமேலழகர் உரை:

ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான, ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த ஜுலை மாதம் டி.ஆர்.பி., நடத்தியது. இதில் தமிழ் பாடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வில், வினாத்தாளில் அதிகளவிலான பிழைகள் இருந்தன.

எனவே, பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் பாடத்திற்கான தேர்வை ரத்துசெய்து, அப்பாடத்திற்கு மட்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.

ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மறுதேர்வு நடத்துமாறு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தது.

Tuesday 29 October 2013

இந்திய விஞ்ஞானி சாதனை புதிய நட்சத்திர கூட்டம் கண்டுபிடிப்பு....!

 விண்வெளி மண்டலத்தில் மிகவும் அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டத்தை வான் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பிங்கல் ஸ்டீல், அவருடைய ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் ஆகியோர் இணைந்து புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். 


இதுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில், மிக அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டம். இது பூமியில் இருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ‘பிக் பேங்’ என்ற அண்டவெளியில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்புக்குப் பின் 700 மில்லியன் ஆண்டுகளில் இந்த நட்சத்திர கூட்டம் உருவாகியுள்ளது.  இது குறித்து விதால் தில்வி கூறுகையில், ‘‘உலகிலேயே முதல் முறையாக நாங்கள் இந்த நட்சத்திர கூட்டத்தை பார்த்தது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி  பல கேள்விகளை எழுப்பியுள்ளது’’ என்றார்.

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.

குறள் 24: 

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

சாலமன் பாப்பையா உரை:

மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, 
நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

பரிமேலழகர் உரை:

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.).

Monday 28 October 2013

உ.பி.யில் பூமியில் புதைந்து கிடக்கும் 4 ஆயிரம் கோடி தங்கம் பிளாட்டினம் கண்டுபிடிப்பு....!



உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு இடையே 'பந்தெல்கன்ட்' பகுதி உள்ளது. இப்பகுதியை 16–ம் நூற்றாண்டில் ராஜபுத்திர மன்னர்கள் ஆட்சி செய்தனர். தற்போது இப்பகுதியில் ஜான்சி, பாண்டா, சித்ரகூட், தாடியா, திகம்ப்ரரி ரத், லலித்பூர், அலகாபாத், கஷஷாமபி, சாகர், தமோ, ஒரை, பின்னா, ஹமித்ரா, நர்சிங்பூர், மொகடா, பன்டா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.

உ.பி.யில் பூமியில் புதைந்து கிடக்கும் 4 ஆயிரம் கோடி தங்கம் பிளாட்டினம் கண்டுபிடிப்பு
தங்க புதையல் 'பந்தெல் கன்ட்' பகுதியில் தொல் பொருள் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் தாவுன்டியா ஹேடர் கிராமத்தில் பூமியை தோண்டி அகழ்வாராய்ச்சி செய்தனர். அதில், அங்கு தங்க படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அதை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 'பந்தெல்கன்ட்' பகுதியில் உள்ள ஜான்சி, ஜலாவுன், மசோபா, ஹமிபூர், பாண்டா, சித்ரகூட் மற்றும் லலித்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு தங்கம் தவிர பிளாட்டினம், சிலிகான் ஆஸ்பெஸ்டாஸ் பொட்டாஷ் உள்ளிட்ட தாது கனிமங்களும் புதைத்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா பகுதியிலும் பூமியில் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை மண்ணியல் மற்றும் சுரங்கங்களின் துறை இயக்குனர் பிங்கா உபாத்யாய் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் நிபுணர்களின் ஆய்வுப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன.
அதை வைத்து பார்க்கும் போது பந்தெல்கன்ட், சோன்பாத்ரா பகுதிகளில் தங்கப்படிவங்கள் கொட்டிக்கிடப்பது உறுதியாகி விட்டது. அனேகமாக இங்குள்ள தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட தாது படிவங்களின் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொல்பொருள் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையின் லலித்பூரல் உள்ள கிடார்டோரி மற்றும் குந்த் காவான் பகுதிகளில் தங்க படிவங்கள் உள்ளன. இவை 3.5 கி.மீட்டர் நீளத்துக்கு பரந்து வியாபித்து கிடக்கிறது.
தற்போதைய மதிப்பு படி இங்கு 140 கிலோ தங்கம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.43 கோடியாகும். லலித்பூரில் உள்ள பீர்வாரில் 87.5 கிலோ தங்கம் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.26.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சோன், பாத்ராவில் உள்ள ஹார்டி மற்றும் பாகிசோடி பகுதிகளில் கிடைத்த மண் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அங்கும் 1200 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் தங்க படிவங்கள் புதைந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 25 கிலோ தங்கம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.7.5 கோடியாகும். அதே நேரத்தில் ஜான்சி மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் இங்கு மிகவும் பணம் கொழிக்கும் கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு 4.5 கோடி டன் சிலிகா தாது உள்ளது. இதன் மதிப்பு ரூ.890 கோடி, இதை இப்பகுதியில் உள்ள இரும்பு, ஸ்டீல், செராமிக்ஸ் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியும். அதை தவிர ஜான்சியின் பதாகான் – மவுரானிபூர் பகுதியில் 1.3 கி.மீட்டர் நீளத்துக்கு ஆஸ்பெஸ்டாஸ் தாது உள்ளது. அதன் மதிப்பு ரூ.1200 கோடி, லலித்பூரியிலும் சிலிகா தாது படிவங்கள் உள்ளன. இங்கு 1.2 கோடி டன் சிலிகா படிவங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ. 237 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இகானா – டாங்கிலி பகுதியில் பிளாட்டினம் இனத்தை சேர்ந்த கனிமங்கள் உள்ளன. இவை 3.5 கி.மீட்டர் தூரத்துக்கு விரிந்து கிடக்கிறது.
இது தமிழ்நாடு, கோவா, நாகாலாந்து மாநிலங்களில் இருப்பதை விட அதிகமாகும். சித்ரகூட் மாவட்டத்தில் செம்ரி மற்றும் ரேவா பகுதியில் உள்ள பாறைகளில் பொட்டாஷ் கனிமம் உள்ளது. மகோபாவில் 1 கோடி டன் சிலிகா உள்ளது. அதன் மதிப்பு ரூ.198 கோடி.
இந்தியாவை பொறுத்தவரை உத்தரபிரதேச மாநிலத்தில் தான் கனிமவளங்கள் மிக குறைவாக கிடைத்து வந்தன. அதுவும் இங்கு டோலமைட், சுண்ணாம்புக்கல், மேக்னசைட், பாஸ்போரைட் போன்ற சாதாரண கனிமங்கள் தான் கிடைத்தன.
தற்போது, இங்கு முதன் முறையாக தங்கம், பிளாட்டினம், சிலிகா, இஸ்பெஸ்டாஸ் போன்ற உயர்ரக கனிம வளங்கள் புதைந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே வளமான மாநிலமாக உத்தரபிரதேசம் திகழும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''

குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.

குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.

இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.

தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

சிறப்பு முகாம்கள் முடிவடைந்தன வாக்காளர் பட்டியலில் சேர வரும் 31ம் தேதி கடைசி நாள்

 வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் முடிவடைந்தது. 2014 ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக் காளர் பட்டியல் (சிறப்பு சுருக்க முறை திருத்தம்) தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டு, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்கள்,



 வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்ய அக்டோபர்  6, 20, மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் அதாவது, மாநிலம் முழுவதும் 60,418 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தது. மக்கள் ஆர்வமுடன் விண்ணப்ப படிவங்களை வழங்கினர். 

சில வாக்குச்சாவடி மையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர். பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடம் மாற்றம் செய்வதற்கான படிவங்கள் அங்கேயே வழங்கப்பட்டன. இதனால், படிவங் களை பெற்றவர்கள் அங்கேயே பூர்த்தி செய்து அளித்தனர்.

இந்த படிவங்கள் 31ம் தேதி வரை ஏற்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படுகிறது. அதை தொடர்ந்து புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும். வாக்கு சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை( கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி) ஆன்லைன் மூலம் 1,27,969 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதே போன்று வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில், நேரடியாக சென்று பெயர் சேர்க்க 12,68,717 பேரும், பெயரை நீக்க 49,190 பேரும், திருத்தம் செய்ய 1,59,524 பேரும், தொகுதி விட்டு தொகுதி மாற 60,687 பேரும் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். பூர்த்தி செய்த படிவங்கள் வருகிற 31ம் தேதி வரை ஏற்கப்படும்.

அதன் பின்னர், விண்ணப்பங்கள் மீது அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து வாக்குசாவடி நிலை அலுவலர் வீடு, வீடாக சென்று விசாரணை மேற்கொள்வார். அதன் பின்னர், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். புதிதாக எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரம் இன்று அறிவிக்கப் படும்.  இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.

குறள் 23: 
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

சாலமன் பாப்பையா உரை:

இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

பரிமேலழகர் உரை:

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

Sunday 27 October 2013

அதிகாரி தகவல் கூடங்குளத்தில் 15 நாட்களில் 500 மெகாவாட் மின் உற்பத்தி...!

 கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 15 நாட்களில் 500 மெகாவாட் மின்சாரமாக உயர்த்த அணு மின் நிலைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் நடந்து வருவதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இந்தியா & ரஷ்ய கூட்டு முயற்சியுடன் யி13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் கடந்த ஜூலை 13ம் தேதி இரவு அணுப்பிளவு தொடங்கியது. இந்த முடிவுகளை கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். எனினும் அணு உலையில் வெளிப்படும் வெப்ப ஆற்றல் நீராவி குழாய்கள் வழியாக செல்லும் வால்வுகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி தாமதமாகி வந்தது.


 கடந்த 22ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது. 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் சோதனை முடிவுகளுக்காக மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.  3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 9.43 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இந்த மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இரவு 10.20 மணிக்கு மின்சார உற்பத்தி 200 மெகாவாட்டை எட்டியது. நேற்று சராசரியாக 200 முதல் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறுகையில், “கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த மின் உற்பத்தியை படிப்படியாக அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது. இந்த மின் உற்பத்தியை 15 நாட்கள¤ல் 500 மெகாவாட்டாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக பல்வேறு ஆய¢வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்“ என்றார். டிசம்பர் இறுதிக்குள் 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தகுதி தேர்வில் தவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை; ஐகோர்ட்டு உத்தரவு...!


தாவரவியல் ஆசிரியர் தகுதி தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பி.தேன்மொழி (வயது 34). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
நான், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவள். எம்.எஸ்சி. (தாவரவியல்), பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம், 193 முதுநிலை தாவரவியல் உதவி பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு கடந்த 21–7–2013 அன்று நடத்திய எழுத்து தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினேன்.
இந்த தேர்வு முடிவு 11–10–2013 அன்று வெளியானது. அதில், எனக்கு 93 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ‘கட் ஆப்‘ மதிப்பெண் 94 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து என் விடைத்தாளை சரிபார்த்தபோது, நான் அளித்த சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்த தேர்வில், கேள்வி எண்கள் 31–க்கு சரியான விடைக்கு மதிப்பெண் வழங்காமலும், தவறான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டும் உள்ளது. நான் அளித்த சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தால், ‘கட் ஆப்’ மதிப்பெண் 94 பெற்று, ஆசிரியர் பணிக்கு தகுதியானவராக இருந்து இருப்பேன்.
இதுகுறித்து, 31–வது கேள்விக்கு சரியான விடைகளை ஆதாரங்களுடன் குறிப்பிட்டு, மனுவாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன்.
இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே சரியான விடை அளித்த எனக்கு மதிப்பெண் வழங்கவும், ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றுவிட்டதால், எனக்கு ஆசிரியர் பணி வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜி.அன்பரசு ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
ஆசிரியர் தகுதி தேர்வில், தாவரவியல் பாடத்தில் 31–வது கேள்விக்கு சரியான விடையை மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது சரியான விடைதான் என்பதை 11–ம் வகுப்பு தாவரவியல் பாடபுத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதையும் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளார்.
இப்போது, மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கினால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நிர்ணயம் செய்துள்ள ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை அவர் பெற்றுவிடுவார்.
எனவே, மனுதாரரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுக்க வேண்டும். 193 தாவரவியல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், ஒரு இடத்தை நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.


குறள் 22: 
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

சாலமன் பாப்பையா உரை:

ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

பரிமேலழகர் உரை:

துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.).

Saturday 26 October 2013

வியக்கவைக்கும் வைக்கோல் குக்கர்...!

'வைக்கோல் மூலம் வீட்டில் சமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்'' என்கிறார் கோபிச்செட்டிபாளையம், ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து.
''எனக்கு அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பேன். 'அடிக்கடி பெட்ரோல், சிலிண்டர் விலையை ஏத்திடுறாங்க. குடும்பத்தை நடத்துறது பெரிய சவாலா இருக்கு’னு அப்பாவும் அம்மாவும்  பேசிக்குவாங்க. இதுக்கு நாம் ஏதாவது செய்யலாமேனு நினைச்சேன். அப்போ உருவானதுதான் இந்த வைக்கோல் குக்கர்'' என்ற ரிஷி சித்து, அதன் செய்முறையை விளக்கினார்.
''சாதம் சமைக்க, பாத்திரத்தில் தண்ணியைக் கொதிக்கவெச்சு, அதில் அரிசியைப் போடுவோம். அது முழுமையா வேகும் வரை காஸ் அடுப்பு எரியும். அப்படி இல்லாமல், ஒரு கொதிவந்ததும் அந்தப் பாத்திரத்தை எடுத்து, வைக்கோல் நிரப்பப்பட்ட அட்டைப் பெட்டியில நடுவில் வைக்கணும். பிறகு, வைக்கோலை அடைச்சு செய்த ஒரு தலையணையால் மூடிடணும். வைக்கோல் என்பது திறன் குறைந்த ஒரு வெப்பக் கடத்தி. அதனால், அது வெப்பம் வெளியே போகாமல் பாதுகாக்கும். அந்த வெப்பத்தில் உள்ளே இருக்கும் அரிசி, நாம குக்கரில் சமைக்கும் நேரத்தில் வெந்துவிடும். இதனால், எரிபொருள் மிச்சம்' என்றார் ரிஷி.
சாதம் மட்டுமல்ல; பருப்பு, சுண்டல் மற்றும் அனைத்து விதமான காய்கறிகளையும் இப்படி வைக்கோல் குக்கர் மூலம் வேகவைக்கலாம்.
''இதனால், நேரம் மற்றும் எரிபொருள் மிச்சப்படும்;  ஆரோக்கியமானதும்கூட. முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது. குக்கரில் சமைக்கிறப்போ, கஞ்சி வெளியே போக வாய்ப்பு இல்லாததால் அரிசியோட கலந்துடுது... இது சர்க்கரை நோய்க்குக் காரணமாயிடுது. ஆனா, இந்த முறையில் நாம் கஞ்சியைத் தனியே வடிச்சுக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்'' என்கிறார்.
ரிஷி சித்துவின் இந்தக் கண்டுபிடிப்பு, டெல்லியில் நடைபெறும் பாலஸ்ரீ விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 15 சிறந்த கண்டுபிடிப்புகளில்  ஒன்றாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
''விருது கிடைப்பதைவிட, இதைப் பார்த்து நூறு பேர் பயன்படுத்தினாலும் கணிசமான அளவு எரிபொருள் மிச்சப்படுமே. நாட்டுக்கு செய்யும் நல்ல விஷயமா அதை நினைக்கிறேன்'' என்று 'பெரிய மனுஷ’த் தோரணையில் பொதுநல அக்கறையுடன் சொல்கிறார் ரிஷி சித்து.

சிறகுகளின்  வாழ்த்துகள்...!

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு...!

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு
இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.
அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.
இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு இரண்டு தேர்வுகள் எழுதவேண்டும்: இந்திய மருத்துவக் கழகம் தகவல்

மருத்துவப் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றபின் மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தற்போது ஒரு நுழைவுத் தேர்வினை எழுதுகின்றனர். ஐந்தரை வருட காலம் கொண்ட இளநிலைக் கல்வியின் கடைசி வருடம் மாணவர்களின் பயிற்சிக் காலமாகக் கருதப்படுகின்றது. இந்த வருடத்தில்தான் அவர்கள் தலைமை மருத்துவரின் கண்காணிப்பில் நோயாளிகளைப் பரிசோதிக்கத் துவங்குகின்றார்கள்.

இந்த பயிற்சிக் காலம் முடிந்தவுடன் மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. எனவே, மாணவர்கள் நோயாளிகளைக் கவனிப்பதைவிட மேற்படிப்புக்கான தங்களின் தயாரிப்புப் பணிகளிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று ஒரு குற்றச்சாட்டு தென்படுகின்றது. அது மட்டுமின்றி, இந்தியாவில் இதுநாள் வரை, மருத்துவப் படிப்பு முடிந்தபின் நேரடியாக மருத்துவத் தொழிலை மேற்கொள்ளுவதற்கு மருத்துவர்கள் எந்த தகுதித் தேர்வையும் எழுத வேண்டியதில்லை. இதனால், அவர்களின் திறமைகளோ, கல்வி மற்றும் அவர்களின் அனுபவ அறிவு போன்றவை திறனாய்வு செய்யப்படாமலே தொழில் துவங்கும் நிலை இருந்து வருகின்றது.

இந்தக் குறைகளை நீக்க வேண்டி சமீபத்தில் நடைபெற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் கூட்டம் ஒன்றில் இளநிலை மாணவர்கள் தங்களது நான்கரை வருடப் படிப்பை முடித்தபின் மேற்படிப்பிற்கு வேண்டிய நுழைவுத்தேர்வினை எழுத வேண்டும் என்றும், கடைசி வருட பயிற்சி காலத்தை முடித்தபின்னர் மருத்துவத் தொழிலை மேற்கொள்ள உதவும் தகுதித் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.  

கடைசி ஒரு வருட மருத்துவப்பயிற்சி என்பது மாணவர்களை நேரடியாக மக்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும் ஒரு காலமாகும்.இந்தக் காலத்தில் அவர்கள் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி தங்களின் அனுபவ அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக நுழைவுத்தேர்விற்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள இந்த நேரத்தை செலவிடுவது அவர்களின் கல்வி முறையைப் பாதிக்கும் என்று கர்நாடகா மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர்.சிக்கநஞ்சப்பா கூறுகின்றார். 

பாடத்திட்டங்களை முடித்த உடனே மேற்படிப்பு நுழைவுத்தேர்வையும் எழுதிவிடுவது மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று அதிகாரிகளும் கருதுகின்றனர். மேலும் முதுநிலை நுழைவுத் தேர்வுகள் இணையதளம் மூலம் நடைபெறவும், சிறப்பு மருத்துவப்பிரிவுகளில் சேர விரும்புவோர் தாங்கள் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் இந்த தேர்வுகளில் கொண்டுவரப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனி: ஐபிஎம் நிறுவனம்: தினம் ஒரு தகவல்

மனிதனின் மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் அதிநவீன கணனியை ஐபிஎம் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, அதனை கருத்தில் கொண்டே மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளையை போன்று கணனி ஒருவகை திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன் வெப்பத்தை நீக்கி குளுமைப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும். 


மூளையில் உள்ள குருதிச் சுற்றோட்டத்தொகுதி போன்ற ஒருவகை மின்னணு இரத்தத்தை கணனியின் வழியாக ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கணனிக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து வெப்பத்தை வெளியேயும் கொண்டுவரும். தற்போதுள்ள கணனிகளில் ஒரு சதவிகிதம் மட்டுமே தகவல்களை பெறுவதற்கு பயன்படுவதாகவும், இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்டால் சிறப்பான கணனியை தம்மால் உருவாக்க முடியும் என்று ஐபிஎம் நிறுவனத்தின் டாக்டர் பாட்ரிக் ருச் மற்றும் டாக்டர் புருனோ மைக்கல் தெரிவித்துள்ளனர். 

மேலும் 2060ஆம் ஆண்டளவில் முழுமையடையக் கூடிய இந்த முயற்சியின் மூலம், தற்போது மிகப் பெரியதாக இருக்ககூடிய கணனியை சிறியதாக உருவாக்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த பொது அறிவுப் போட்டியில் இக்கணனி மனித மூளையை தோற்கடித்துவிட்டது. மனித மூளை 20 வாட்ஸ் சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றது என்றும், கணனி 85,000 வாட்ஸ் சக்தியை பயன்படுத்துகின்றது இது நியாயமற்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கேள்விகளுக்கு புதிய மின்னணு இரத்தத்தால் செயல்படும் கணனிகள் பதில் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

பயனுள்ள இணையதள முகவரிகள்


நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்

01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள முகவரி
http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/

17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
http://www.tneb.in/