Friday 18 October 2013

மாணவ–மாணவிகளிடம் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணம் ரத்து செய்வதனால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை தடுக்கும் வகையில் ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



 மாணவ–மாணவிகளிடம் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணம் ரத்து செய்வதனால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை தடுக்கும் வகையில் ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
2008–2009–ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு, அதனால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்பினை அரசே ஈடு செய்யும் வகையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2011–2012–ம் ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ–மாணவிகளிடம் வசூலிக்கப்பட வேண்டிய சிறப்பு கட்டணங்களுக்கு பதிலாக அதனை ஈடு செய்து அந்த தொகையினை பள்ளிகளுக்கு வழங்கிட அரசால் ரூ.21 கோடி (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.20.50 கோடி, மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், தற்போது இந்த திட்டத்திற்கு 2012–13–ம் நிதி ஆண்டில் ரூ.ஆயிரம் மட்டுமே அடையாள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், 2011–12–ம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளுக்கு 6 முதல் 12–ம் வகுப்புகளின் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களின் சிறப்பு கட்டணம் ஈடு செய்யும் பொருட்டு, வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டினை போன்று 2012–13–ம் ஆண்டிற்கும் வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டு உள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனரின் கருத்துருவினை பரிசீலனை செய்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படாத செலவினங்களுக்கு மட்டுமே இழப்பீடு நிதியினை பயன்படுத்தும் வகையில் ரூ.20.50 கோடி வீதம், 2012–13 மற்றும் 2013–14–ம் கல்வி ஆண்டில் மொத்தம் ரூ.41 கோடி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.
உள்ளாட்சி நிறுவன பள்ளிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படாது. ஏற்கனவே செலவிடாமல் உள்ள நிதியினை சரிகட்டிய பின்னர், இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இந்த கூடுதல் செலவினம் 2013–14–ம் ஆண்டிற்கான திருத்திய மதிப்பீடு, இறுதி திருத்த நிதி ஒதுக்கத்தில் மேற்கொள்ளப்படும். இருப்பினும் சட்டமன்றத்தின் ஒப்புதலை பெறும் பொருட்டு, இந்த செலவினத்தை 2013–14–ம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட வேண்டும். இதனை எதிர்நோக்கி இந்த செலவினத்தை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த செலவினத்திற்கான உரிய கருத்துருவினை 2013–14–ம் ஆண்டிற்கான திருத்திய மதிப்பீடு, இறுதி திருத்த நிதி ஒதுக்கம் மற்றும் துணை மதிப்பீட்டில் சேர்க்கத்தக்க வகையில் உரிய விவரங்களுடன் நிதி(கல்வி–11) துறைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment