Monday 23 September 2013

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?

கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய  தீர்ப்பில் தெரிந்துவிடும். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி 
வழங்கப்பட்டது. இந்த நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அதாவது கடந்த 2010ம் ஆண்டு 32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்து விட்டது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை. இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி, சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகி, தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது என்றனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா என்று இன்று தெரியும்.

No comments:

Post a Comment