Tuesday 22 October 2013

மங்கள்யான்-1 செயற்கை கோள் நவம்பர் 5-ல் விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ அறிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் உள்ள கனிம வளம், அங்கு மனிதன் வாழ்வதற்கு தேவையான காரணிகள் நிலவுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக 'மங்கள்யான்' என்ற செயற்கை கோளை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) தயாரித்துள்ள இந்த விண்கலம், பி.எஸ்.எல்.வி-25 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
மங்கள்யான்-1 செயற்கை கோள் நவம்பர் 5-ல் விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ அறிவிப்பு

இதனை வருகிற நவம்பர் 19-ந்தேதிக்குள் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

'மங்கள்யான்' விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான தேதி கடந்த 19-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தெற்கு பசிபிக் கடலில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விண்ணில் செலுத்தும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அத்துடன், விண்கலம் ஏவுவதற்கான அதிகார வாரியம் வருகிற 22-ந்தேதி மீண்டும் ஒரு முறை கூடி, விண்ணில் ஏவுவதற்கான தேதியை இறுதி செய்து அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, விண்கலம் ஏவுவதற்கான அதிகார வாரியம் இன்று கூடி முடிவு செய்தது. பின்னர் இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிரகங்களுக்கிடையிலான ஆய்வு நடத்தும் இந்தியாவின் முதல் செயற்கை கோளாள 'மங்கள்யான்' செயற்கை கோள், பி.எஸ்.எல்.வி.-சி25 ராக்கெட் மூலம் நவம்பர் 5-ம் தேதி பிற்பகல் 3.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ராக்கெட்டுடன் செயற்கைக் கோளை ஒருங்கிணைக்கும் பணி முடிவடைந்துவிட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment